ஈடன்கார்டனில் 18வது சீசன் ஐபிஎல் இன்று தொடக்கம்; முதல் போட்டியில் கொல்கத்தா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்: மழை மிரட்டலுக்கு மத்தியில் வெற்றி யாருக்கு?

கொல்கத்தா: 18வது சீசன் ஐபிஎல் டி.20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் வரும் மே 18ம் தேதி வரை 70 லீக் ஆட்டம் நடைபெறுகிறது. மே 20ம் தேதி முதல் பிளே ஆப் சுற்று போட்டி நடைபெறுகிறது. மே 25ம் தேதி கொல்கத்தாவில் இறுதி போட்டி நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த முறை கொல்கத்தா அணி புதிய கேப்டன் ரகானே தலைமையில் களம் இறங்குகிறது. டிகாக், வெங்கடேஷ் அய்யர், ரிங்குசிங், ரஸ்சல் என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பவுலிங்கில் ஹர்சித் ரானா, ஆன்ரிச் நார்ட்ஜே வேகத்தில் மிரட்டலாம். சாம்பியன் டிராபியில் கலக்கிய வருண்சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரேன் சுழலில் அசத்துவர். மறுபுறம் பெங்களூரு அணியை புதிய கேப்டன் ரஜத் படிதார் வழிநடத்த உள்ளார். விராட் கோஹ்லி, பில்சால்ட், தேவ்தத் படிக்கல், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ்சர்மா, டிம் டேவிட் என நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், ஹேசல்வுட், யாஷ் தயாள், சுழலில் குர்னல் பாண்டியா இடம்பெறுவர். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ளன.

முதல் போட்டிக்கு முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. நடிகை திஷாபதானி, பாடகி ஸ்ரேயா கோஷல், கரன்அவுஜ்லா ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இதனிடையே கொல்கத்தாவில் இன்று கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை பெய்ய 74% வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மேகமூட்டம் 97% ஆக இருக்கும். மாலையில் மழை பெய்ய 90% வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் போட்டியில் மழை குறுக்கீடு கண்டிப்பாக இருக்கும். நேற்றும் கொல்கத்தாவில் கனமழை பெய்ததால் அணிகளின் பயிற்சி பாதிக்கப்பட்டது.

 

The post ஈடன்கார்டனில் 18வது சீசன் ஐபிஎல் இன்று தொடக்கம்; முதல் போட்டியில் கொல்கத்தா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்: மழை மிரட்டலுக்கு மத்தியில் வெற்றி யாருக்கு? appeared first on Dinakaran.

Related Stories: