சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதிமறுவரையறைக்கு எதிரான கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக நேற்று அவர்கள் சென்னை வந்தனர். தலைவர்கள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது.
அதன்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதால் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கும் சூழல் என்பது தான் தற்போது நிகழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
‘‘இந்த கூட்டத்தில், இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது, நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது.
இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில் 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் – தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்,
இதனையடுத்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 7 மாநிலம் உள்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தினை ஒரு அமைச்சர் மற்றும் எம்.பி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து நேரில் சென்று முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைவர்கள் உறுதியளித்தனர்.
இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதன்படி, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை விமானநிலையத்தில் நேற்று காலை கேரளா முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்ததார்.
அவரை தமிழ்நாடு முதல்வரின் சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, நேற்று பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான சஞ்சய்குமார் தாஸ் பர்மா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் மானி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வந்னர். கர்நாடகா சார்பில் துணை முதல்வர் சிவக்குமாரும் நேற்று இரவு சென்னை வந்தார். இவர்கள் அனைவரையும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர்கள், எம்பிக்கள் வரவேற்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சென்னையின் பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கபட உள்ளனர். பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வந்துள்ளதால் சென்னை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றிலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கூட்டம் நடைபெறும் இடத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டு நடவடிக்கை குழு’ ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய கூட்டத்தில் என்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* சென்னை கிண்டியில் இன்று காலை 10 மணிக்கு தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
* கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை: கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.