இரட்டை இலை ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அதிமுக மனு: ஐகோர்ட்டில் தாக்கல்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சூர்ய மூர்த்தி அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதற்கிடையே இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அதிமுக, பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவுகள் உள்ளதா என்று திருப்தி அடைந்த பிறகே விசாரணையை தொடர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை, சூர்ய மூர்த்தி தொடர்ந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் சேர்க்க கோரி அதிமுக தரப்பில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுதாக்கல் செய்ய ஏற்பட்ட தாமதத்தை பொறுத்து, மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் முறையிடப்பட்டிருந்தது. தாமதத்தை அனுமதிக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிடுமாறு உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு உத்தரவிட்டது.

The post இரட்டை இலை ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி அதிமுக மனு: ஐகோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: