புவனகிரி அருண்மொழித்தேவன் (அதிமுக): கடலூர் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறைஉள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி – மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி அதனை சரியாக பராமரிக்காமல் கிடப்பில் போட்டிருந்தனர். அந்த மருத்துவமனைக்கு ரூ.30 கோடி செலவில் கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், 187 புதிய பணியிடங்களை அம்மருத்துவமனையில் நிரப்பட்டுள்ளது.
அருண்மொழித்தேவன்: இந்த நிதிநிலை அறிக்கையில் 100 நாள் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்?
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி: 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதிஒதுக்கவில்லை என்கிறார். ஆனால் 100 சதவீதம் ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கு நிதியை ஒதுக்குகிறது. ஆனால், இந்த நிதியாண்டு முடியப்போகிறது. தற்போது வரை அதற்கான தொகை வழங்கப்படவில்லை. இதன்மூலம் 3,900 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. வரக்கூடிய ஏப்ரல் 1ம் தேதி முதல் அடுத்தாண்டுக்கான நிதியாண்டு தொடங்கவுள்ளது. இந்த பாக்கி தொகை அதன் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கும். தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் 20 கோடி மனிதசக்தி நாளாக இருந்தது. தற்போது 30 கோடி மனித சக்தி நாளாக உயர்ந்திருக்கிறது.
அருண்மொழித்தேவன்: கரும்பு சாகுபடி விவசாயம் கடந்த காலங்களை விட குறைந்துவிட்டது. கரும்பு சாகுபடி குறித்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்புமில்லை.
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: கரும்பு சாகுபடி செய்வோர் சோளத்திற்கு சென்றதால் அதற்கான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளோம். கரும்புக்கும் டன்னுக்கு ரூ.3500 வரை உயர்த்தி வழங்கி உள்ளோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, துணை கேள்வி கேட்க கோவை வடக்கு அம்மன் அர்ஜூன் (அதிமுக) கோரிக்கை வைத்தார். ஆனால் வேறு சில எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி கொடுத்ததால் அம்மன் அர்ஜூனுக்கு பேச அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த அம்மன் அர்ஜூன், நான் தொடர்ந்து துணை கேள்வி கேட்க அனுமதி கேட்கிறேன். எனக்கு ஏன் அனுமதி தரவில்லை என்று உட்கார்ந்தபடி சபாநாயகரிடம் சத்தம் போட்டு கேள்வி கேட்டார். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் அப்பாவு, நான் யாருக்கும் ஆள் பார்த்து பேச அனுமதி கொடுப்பதில்லை. ஒரு துணை கேள்வி ஆளுங்கட்சிக்கு கொடுத்தால், ஒரு கேள்வி எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்குவேன். இப்படி உட்கார்ந்து பேசக்கூடாது. உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் எச்சரித்தார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசியதாவது: ஒடிசா, தெலங்கானாவை அடுத்து, பிற்படுத்தப்பட்ட மக்கள், எஸ்சி, எஸ்டி மக்களுக்கான சாதிவாரி கணக்கெடுப்பிற்கான எண்ணிக்கையை உயர்த்தி வழங்கியிருக்கிறார்கள். உங்கள் காலத்தில், உங்கள் தந்தையைப் போன்று இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி எந்தப் பிரிதொரு சாதியும் தங்களை பகைத்துக் கொள்ளாமல், தங்களிடத்தில் கோபித்துக் கொள்ளாமல், அனைத்து மக்களுக்கும், தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து சாதி மக்களுக்கும் அவரவர்கள் எண்ணிக்கைக்கேற்ப சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை உங்கள் காலத்தில் வழங்கி, கலைஞர் சமூக நீதி காவலர், வழித்தோன்றல் அரசு, தளபதி அரசு என்கிற வரலாற்று பெயரை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார்.
The post மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.3,900 கோடி ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிறுத்திவைப்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.