காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் திரவுபதி அம்மன் கோயில் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான எம்கேடி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமுஜிஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் கே.பி.ஜார்ஜ், நகர நிர்வாகிகள் அப்துல்காதர், ஸ்ரீமதிராஜி, ஹரி, ரவி, டில்லி, குமரவேல், சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரமன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபுகஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”கடந்த 26ம்தேதி முதல் அடுத்த மாதம் 10ம்தேதி வரை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும். சசிகலா காலில் விழுந்த பிறகுதான் எடப்பாடி என்ற ஒருவர் இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். ஆனால் தளபதி 14 வயதிலேயே பொது வாழ்விற்கு வந்தவர். கடந்த 58 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து புரட்சி செய்ததில் இந்தியாவுக்கே அவர் யார் என தெரியும். ஒரு ஆண்டு காலம் தளபதி மிசாவில் இருந்தவர்.
ஆனால், சீமானை போன்றவர்கள் ஒருவாரம்கூட சிறையில் தாக்குபிடிக்க மாட்டார்கள். படிப்படியாக வளர்ந்து முதல்வராக ஆனார் மு.க.ஸ்டாலின். மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட வர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் வழங்கும் பணி தொடங்கப்படும். ஜெயலலிதா இருக்கும் வரை அனைத்து திட்டங்களும் ஒழுங்காக இருந்தது. ஆனால் அவர் மறைந்த பிறகு தாலிக்கு தங்கம் திட்டத்தில் ஏழரை லட்சம் மனுக்களை வாங்கி கிடப்பில் போட்டுவிட்டு திமுக மீது பழியை போட்டுவிட்டனர். இந்த திட்டத்தை புதுமைப்பெண் திட்டமாக மாற்றி திமுக கொண்டு வந்துள்ளது. இந்தி படித்தவர்கள் எங்கள் வீட்டில்தான் வீட்டு வேலை செய்கின்றனர். வாழ்வோ சாவோ, ஆட்சி இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களோடு மக்களாக வாழ்வதுதான் திமுக. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். கூட்டத்தில், திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், நகர இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
The post மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.