கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் ரூ.1,600 கோடி பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர்: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

* சைபர் குற்றவாளிகளின் தலைநகரமாக கம்போடியா விளங்குகிறது
* பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சைபர் ேமாசடிகளை தடுக்க போலீஸ் கமிஷனர் அருண் அறிவுரைப்படி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கற்கரையில் நேற்று நடந்த இந்த பேரணியை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி சென்றனர்.

இந்த பேரணியில் சைலேந்திரபாபு பேசியதாவது: தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரிய குற்றங்கள் என்றால் அது சைபர் குற்றங்கள்தான். சைபர் குற்றங்களில் கடந்த ஆண்டும் மட்டும் ரூ.1,600 கோடி பணத்தை தமிழக மக்கள் இழந்து இருக்கிறார்கள். கர்நாடகா மக்கள் ரூ.1,800 இழந்துள்ளனர். அகில இந்திய அளவில் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் கோடி வரைக்கும் மக்கள் பணத்தை இழந்து இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
சைபர் குற்றவாளிகள் பெரிய அளவில் மோசடி செய்வதற்காகவே வட இந்தியாவில் அதிக ஐடி நிறுவனங்களை வைத்துள்ளனர். ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச எல்லையில் ‘நூ’ என்ற பகுதியில் நிறைய பேர் இந்த மோசடிகளில் ஈடுபடுவதாக தகவல் வருகிறது. அதேபோல் ‘மதுரா’ என்ற இடம் அங்கு ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சைபர் மோசடி நபர்கள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதற்கு ஒரே தீர்வு 7.5 கோடி மக்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்பு எடுக்காதீர்கள். ஆதார் கார்டு இணைப்பு, மின்சார கட்டணம் என கூறினால் கூட அவர்களை கண்டு கொள்ள வேண்டாம். சைபர் குற்றங்களுக்கும் ஆயுள் தண்டனை என்று சட்டம் வந்தால் மட்டுமே ஓரளவு சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். இதுபோன்ற சைபர் கிரைமில் திருடப்படும் பணம் எல்லாம் கம்போடியா, தாய்லாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று விடும். தற்போது குற்றவாளிகளின் தலைநகரமே கம்போடியாதான்.

தமிழ்நாட்டு மக்களிடம் தற்போது அதிக பணம் இருக்கு. குறிப்பாக இங்கு பொருளாதார வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். சைபர் குற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, போக்குவரத்து தெற்கு இணை கமிஷனர் பண்டி கங்காதர், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் ஆரோக்கியம், கீதாஞ்சலி, வனிதா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் ரூ.1,600 கோடி பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர்: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: