அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம் பொய்யிலேயே பிறந்து, வளர்ந்த கட்சித்தலைவர் அண்ணாமலை

சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வடபழனி ஆண்டவர் கோயிலில் 4 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீரிவரிசைப் பொருட்களை வழங்கினார். பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த அரசு பொறுப்பேற்ற பின், அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,713 கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. மாநில வல்லுநர் குழுவால் 13,024 கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.5,602 கோடி மதிப்பீட்டிலான 24,252 பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,293 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒளிவு மறைவற்ற வகையில், எந்தெந்த பணிகளுக்கு உபயதாரர்கள் நிதியளிக்கின்றார்களோ அதனை முறையாக பயன்படுத்துகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. தினந்தோறும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஒரு மாநில கட்சிக்கு தலைவர் இருப்பாரென்றால், அவர் அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும். காமாலை நோய் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்ட அண்ணாமலை நிதிநிலை அறிக்கை குறித்து நிறைவாக கூறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை வசை பாடியவர்களும் இன்றைக்கு வாழ்த்து சொல்கிற அளவிற்கு நிதிநிலை அறிக்கையை உலக அரங்கிலே தூக்கி பிடித்த, மதிநுட்பம் நிறைந்த அரசியல் தீர்க்கதரிசியாக முதலமைச்சர் திகழ்கின்றார்.

நிதிநிலை அறிக்கையானது ஒன்றியம் கடந்து உலக நாடுகள் பாராட்டுகின்ற அளவிற்கு இருக்கின்ற போது மக்களுடைய ஆதரவைப் பெறாத அண்ணாமலை போன்றவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேளாண்மை நிதிநிலை அறிக்கையை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, இணை ஆணையர்கள் இலட்சுமணன்,ரேணுகா தேவி, முல்லை, துணை ஆணையர் ஹரிஹரன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம் பொய்யிலேயே பிறந்து, வளர்ந்த கட்சித்தலைவர் அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: