24,25 தேதிகளில் 2 நாள் வங்கி ஸ்டிரைக்

கொல்கத்தா: இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து வரும் 24, 25 ஆகிய தேதிகளில் தொடர் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய அமைப்பு(யு.எப்.பி.யு.) நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாள் அறிவிக்க வேண்டும். பொதுமக்களின் தாக்குதலில் இருந்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயல்திறன் மதிப்பாய்வு மற்றும் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பிரிவினை மற்றும் பாகுபாட்டை உருவாக்கும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.இந்த பிரச்னைகள் பற்றி இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என தெரிவித்துள்ளது.

இது பற்றி வங்கி ஊழியர் சங்க தேசிய சம்மேளனத்தின் பொது செயலாளர் எல். சந்திரசேகர் நேற்று கூறுகையில்,‘‘ இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய பிரச்னைகள் எழுப்பப்பட்டது. இதில் ஆக்கப்பூர்வமான எந்த முடிவுகளும் வரவில்லை. இதையடுத்து வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி 2 நாள் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்’’ என்றார்.

The post 24,25 தேதிகளில் 2 நாள் வங்கி ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: