அடியேனும் நமஸ்கரித்து விட்டு ஓரமாக அமர்ந்தேன். குழந்தை மாதிரி சிரித்துப் பேசும் குருநாதனின் முகத்தைப் பார்ப்பதே ஆனந்தம்! அப்போது ஆஸ்ரமத்தில் பணியாற்றும் வயதான வேலைக்காரர் ஒருவர் அங்கு வந்தார். அடியேனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர் நினைவில்லை. ஒல்லியானவர் என்பதால், அவரை சத்குருநாதன் உட்பட அனைவரும் சோனி என்று அழைப்பர். அவர் கோபிக்க மாட்டார்.
உடம்பு முழுவதும் திருநீறு பூசி, முழுங்கால்களுக்குக் கீழ் முழ வேட்டியுடன் சத்குருநாதனை நமஸ்கரித்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தார். அவரைப் பார்த்ததும் குருநாதனுக்கே சிரிப்பு வந்தது. “என்ன சோனி… என்ன விசேஷம்? ஸ்ரீராமனுக்கு முன்னால நிக்கற அனுமன் மாதிரி அப்படியே நிக்கறயே… ஏதாவது சமாசாரம் உண்டோ?” என்று கேட்டார் சத்குருநாதன்.
சோனி, உடல் நெளிந்து, தலையைச் சொறிந்தார். குருநாதன் விடவில்லை. சிரித்தவாறே, “நாம ஒடம்ப நெளிச்சு தலய சொறியறது லேர்ந்தே, ஏதோ முக்கியமான விஷயத்துக்காக ‘அடி’ போட வந்துருக்கோம்னு புரியுது. சரி… அது என்னனுதான் சொல்வோமே” என எதுவுமே தெரியாத மாதிரி அனைத்தும் அறிந்த அந்த சித்த புருஷர் கேட்டார்! அதற்கு சோனி தயங்கியபடி, “அத குருநாதன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறேன். எங்கள் மாதிரியானவங்களுக்கு எல்லாமே நீங்கதானே சாமி” என்று முடிப்பதற்குள், “சரி… சரி… நாம வந்த விஷயத்தச் சொல்வோம்” என்றார் ஸ்வாமிகள்.
சோனி மென்று விழுங்கியபடி, “அது… அது… வேற ஒண்ணுமில்லீங்க குருநாதா! எம்மவன் வயித்துப் பேத்திக்கு கண்ணாலத்துக்கு (திருமணம்) ஏற்பாடு செஞ்சுருக்கேன். இன்னும் நாலு… அஞ்சு நாளுக்குள்ளாற முகூர்த்த ஓல எழுதியாவணும். பிறகு அடுத்த மாசம் திருக்கோவிலூர்ல கண்ணாலம் நடத்தோணும். குருநாதன்தான் அருளு செஞ்ச கூட்டி வைக்கோணும்!” என்று பவ்வியமாகப் பேசிவிட்டு மீண்டும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தார்.
உடனே ஸ்வாமிகள், “ஓஹோ… ஒம் பேத்திக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறயாக்கும். பேஷ் – பேஷ்! பண்ணுவோம். நாம ரொம்பவும் சந்தோஷம் படறோம். பாண்டுரங்கன் கிருபைல எல்லா நல்லபடியா நடக்கும். கவலையே வேண்டாம்” என பூரணமாக ஆசீர்வதித்தார். மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார், சோனி. அதை உணர்ந்த குருநாதர், “அதிருக்கட்டும்… நமக்கு எத்தனை பசங்கள்?” என்று வினவினார். உடனே சோனி.
“நமக்கு ஒரே ஒரு மவந்தான். அவனுக்கு மூணும் பெண் பிள்ளையங்க. இப்ப கண்ணாலம் ஆவப்போறவதான் மூத்தது. மீதி, ரெண்டும் சின்னப் புள்ளைங்க. நீங்கதான் கிருபை பண்ணணும்…” என்று குழைந்தார். ஸ்வாமிகள் முகத்தில் எல்லாம் புரிந்தது போன்ற ஒரு புன்முறுவல். இருந்தும், புரியாத மாதிரி, “நம்ம பேத்தி கல்யாணத்துக்கு சாமிகிட்டேருந்து நாம என்ன எதிர்பாக்கறோம்?” என்று கேட்டார். சோனிக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. அவர், “மூத்த ஓல எழுதறதுலேருந்து, திருக்கோவிலூருல ஒரு சின்ன சத்திரத்த வாடகைக்கு புடிச்சு, சீரு செனத்தியல்லாம் செஞ்சு, கண்ணாலத்த நடத்துறதுக்கு ஐயாயிரம் ரூவா புடிக்குது குருநாதா.
இந்த ஏழ மேல கருண வெச்சு அந்த ரூவாய நீங்கதான் அனுக்கிரகம் பண்ணணும்!” என்று பிரார்த்தித்தார். குருநாதன் அதைக் காதில் வாங்காதது போல, “அது சரி… ஒம் பையன் என்ன பண்றான்?” என்று கேட்டார். சோனி, “அவுனுக்கு, திருக்கோவிலூரில அரிசி மண்டியில எடுபிடி வேலை. அறுவது ரூவா சம்பளம். சாப்டது போக, ஒண்ணும் மிச்சம் பிடிக்க முடியலே. எப்படியாச்சும் நீங்கதான் ஐயாயிரத்த அனுக்கிரகம் பண்ணணும்” என்று உருகினார். உடனே ஸ்வாமிகள் சற்றுக் கோபம் தொனிக்க, “நா ஒரு சந்நியாசி. எங்கிட்ட வந்து பணங்காசெல்லாம் ேகக்கறயே… இது என்ன ஞாயம்? நம்மால அதெல்லாம் பண்ண முடியாது” என்று கூறிவிட்டு எழுந்தவர், அருகில் இருந்த மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, “உள்ளே போய் ஒரு உரிச்ச தேங்காயும், ஒரு ரூபா பணமும் கொண்டு வா!” என்று பணித்தார்.
கொண்டு வந்தார் அவர், இரண்டையும் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள், சோனியை அருகே அழைத்தார். உரித்த தேங்காயையும், ஒரு ரூபாய் நாணயத்தையும் அவர் கையில் அனுக்கிரகித்துவிட்டு, “சோனி! இந்த ரெண்டையும் குருநாதனுடைய ஆசீர்வாதமா வாங்கிக்கோ… ஒம் பேத்தி கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கும்!” என்ற படி எழுந்து போய்விட்டார். அவற்றை மாறி மாறிப் பார்த்தபடி விக்கித்து நின்றார், சோனி. அவர் கண்கள் பனித்தன. அப்போது இரவு சரியாக 7.30 மணி.
தபோவனத்துக்குள் டூரிஸ்ட் பஸ் ஒன்று வந்து நின்றது. அது குஜராத் மாநில ரிஜிஸ்டிரேஷனுடன் கூடிய பஸ். அதிலிருந்து ஆண்களும், பெண்களுமாக ஐம்பது பேர் இறங்கினர். அவர்கள் மண்டபத்துக்குள் நுழைவதற்கும், சத்குருநாதன் தனது ஆசனத்தில் வந்து அமர்வதற்கும் சரியாக இருந்தது. அங்கேயே நின்றிருந்த சோனியை புருவங்களை உயர்த்தி ஒரு தடவை பார்த்தார் ஸ்வாமிகள்.
பரம பக்தியோடு தேங்காயுடன் நின்றிருந்த அவரைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. வந்தவர்கள் அனைவரும் சத்குருநாதனை நமஸ்கரித்தனர். அவர்களை ஆசீர்வதித்த ஸ்வாமிகள், இந்தியில் கேட்டார்; “நாமெல்லாம் குஜராத்திகளா?” “ஆமாம் ஸ்வாமிஜி” என்றனர் அனைவரும் கோரஸாக இந்தியில். சத்குருநாதன், “நீங்களெல்லாம் யாத்திரையாக எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்களில் ஒருவர், “ராமேஸ்வரம் ஸ்வாமிஜி! வழியிலுள்ள முக்கிய ஸ்தலங்களை தரிசிக்க உத்தேசம்!” என்றார். ஸ்வாமிகள்; “ரொம்ப சந்தோஷம்… யாத்திரை பூர்த்தியடைய ஆசீர்வதிக்கிறோம்!” என்றார்.
மீண்டும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு அமர்ந்தனர். அப்போது மடத்தைச் சேர்ந்த ஒருவர் பெரிய ரஸ்தாளி வாழைப்பழத்தார் ஒன்றையும், பெரிய வாளியில் பசும் பாலும் கொண்டு வந்தார். வழங்கும்படி ஜாடை காட்டினார் ஸ்வாமிகள். அவர்கள் சாப்பிட்டு முடித்தனர். அவர்கள் பஜனைப் பாடல்கள் சிலவற்றைப் பாடுமாறு சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். அப்போது மணி 8.30.
பிறகு சோனியை சைகை காட்டி அழைத்தார், ஸ்வாமிகள். குஜராத்தி பக்தர்களை நோக்கி, “இவர் கையில் ஒரு தேங்காய் வைத்திருக்கிறார். உங்களில் யாராவது ஒருத்தர் அதை உடைக்கணும்… முடியுமா? என்று சிரித்தபடி கேட்டார். அனைவரும் எழுந்து நின்றனர்.அவர்களில் ஒருவரிடம் தேங்காயைக் கொடுக்கச் சொன்னார் ஸ்வாமிகள். இதை உடைக்க முடியலேன்னா நூறு ரூபாய கிருஷ்ணார்ப்பணமாக கொடுக்கணும். சம்மதமா?” எனக் கேட்டார். குஜராத்திகள் சம்மதித்தனர்.
தேங்காயை வாங்கியவர், அருகில் இருந்த கருங்கல் பாறையில் அதை உடைக்க முற்பட்டார். ம்… ஹும்! அது உடையவே இல்லை! ஆச்சரியத்தோடு ஸ்வாமிகளைப் பார்த்தார். சலனம் இன்றி அமர்ந்திருந்தார், குருநாதன். சோனிக்கு ஜாடை காட்டி, அவரது மேல் வஸ்திரத்தை தரையில் விரிக்கச் சொன்னார். அவரும் விரித்தார். பிறகு தேங்காய் உடைக்க முற்பட்டவரிடம், ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்றபடி நூறு ரூபாயை சமர்ப்பிக்கச் சொன்னார் ஸ்த்குருநாதன்.
தொடர்ந்து ஆண் – பெண் என ஒவ்வொருவராக தேங்காயை உடைக்க முயன்றனர். ‘ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்’ சத்தமே கேட்டது! சோனியின் வஸ்திரம் ரூபாய் நோட்டும், சில்லறையுமாக நிரம்பியது. அந்தத் தேங்காய் அப்படியே இருந்தது! அப்போது இரவு 10 மணி. ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியை அழைத்து, “இத்தனை பேராலையும் உடைக்க முடியலே! நாம உடைச்சுப் பாப்பமே… என்ன!” என்றார்.
உடனே சோனி, “இத்தனை பலசாலிங்களாலயே முடியலீங்களே குருநாதா! பலமே இல்லாம சோனியா இருக்கற நான் மட்டும் எப்படி ஒடைக்கப் போறேன்?” என நெளிந்தார். ஸ்வாமிகள், விடவில்லை. “நாம அப்படி சொல்லப்படாது! முயற்சி பண்ணுவோமே!” என்று உற்சாகப்படுத்தினார். சோனிக்கு தைரியம் வந்தது. அவர் தேங்காயைக் கையில் எடுத்து, “குருநாதன் அருள் இருந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்!” என்றுகூறி விட்டு ‘`குருநாதனே துணை… குரு நாதனே துணை… குருநாதனே துணை!’’ என மூன்று தடவை உச்சரித்துவிட்டு மும்முறை ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார். ஸ்வாமிகள் அர்த்தபுஷ்டியுடன் புன்னகைத்தார். தேங்காயுடன் பாறையை நெருங்கிய சோனி, பலம் கொண்டு தேங்காயை பாறையில் அடித்தார். என்ன ஆச்சரியம்! அந்தத் தேங்காய் சரி பாதியாக உடைந்தது!
அனைவரும் கரகோஷம் செய்தனர். ஸ்வாமிகள் எந்த விதச் சலனமுமின்றி அமர்ந்திருந்தார். படபடப்போடு ஓடிப்போய் குருநாதனின் பாதங்களில் விழுந்து வணங்கினார், சோனி.
அவரை ஏறிட்டுப் பார்த்த ஸ்வாமிகள், “இவ்வளவு பேராலையும் ஒடைக்க முடியாத தேங்காய, நாம சர்வ சாதாரணமா ஒடச்சுட்டோம். அதனால, வஸ்திரத்துல சேர்ந்திருக்கற பணம் நம்மைத்தான் சேரணும். கொஞ்சம் பொறுப்போம்!” என்று கூறிவிட்டு மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து பணத்தை எண்ணச் சொன்னார். அவர் எண்ணி முடித்துக் கூறிய தொகை ரூபாய் 5,501. ஸ்வாமிகள் சிரித்தவாறு சோனியிடம், “பேத்தி கல்யாணத்துக்கு நாம எதிர்பார்த்தது ஐயாயிரம் ரூபாய். ஆனா, பாண்டுரங்கன் இந்த பக்தாள் மூலமா அனுக்கிரகம் பண்ணியது 5,501 ரூபாய். பேத்தி கல்யாணத்த சந்தோஷமா நடத்துவோம்.
‘ஸ்ரீகிருஷ்ண அனுக்கிரகம்’னு சொல்லிண்டே வஸ்திரத்தோடு ரூபாய எடுத்துப்போம்!” என்றார். உடனே நெடுஞ்சாண்கிடையாக குருநாதனின் பாதங்களில் விழுந்த சோனி, குலுங்கிக் குலுங்கி அழுதார். இதைப் பார்த்த இந்த அடியவனின் கண்களும் குளமாயின!“எல்லாருக்கும் ராத்திரி போஜனம் தயாரா இருக்கு. சாப்பிட்ட பின் இரவு இங்கேயே தங்கிட்டு, காலையில் பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்படலாம்!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார், ஸ்வாமிகள்.
தொகுப்பு: ரமணி அண்ணா
The post எதிர்பார்த்ததைவிட அதிகம் appeared first on Dinakaran.