உற்பத்தியாளர்கள் கவலை; மரக்காணம் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இங்கு பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. இதனால் உப்பு தொழில் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலை நம்பி இப்பகுதியில் சுமார் 4,000 தொழிலாளர் குடும்பங்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்தாண்டு எதிர்பாராத விதமாக டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நீர் ஜனவரியில்தான் வடிய துவங்கியது. இதன் காரணமாக வழக்கத்தை விட இந்தாண்டு 2 மாதங்கள் கழித்து உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகளை உப்பு உற்பத்தியாளர்கள் துவங்கினர். இந்த பணிகள் முடிந்து கடந்த ஒரு வாரமாகதான் உப்பு உற்பத்தி துவங்கியது. இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தது. இதனால் உப்பளங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிய குறைந்தது 10 நாட்களுக்கு மேல் ஆகும். இதுபோல் மழை தொடர்ந்தால் உப்பு உற்பத்தி துவங்க பல நாட்களாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கவலையில் உள்ளனர்.

The post உற்பத்தியாளர்கள் கவலை; மரக்காணம் பகுதியில் கனமழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: