லச்சிவாக்கம் கிராமத்தில் செங்காளம்மன் கோயில் நவகலஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: லச்சிவாக்கம் கிராமத்தில் செங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற முதலாமாண்டு வருஷாபிஷேகம் மற்றும் நவகலஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே லச்சிவாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ செங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த வருடம் தைமாதம் நடைபெற்றது. இதனையொட்டி, முதலாமாண்டு வருஷாபிஷேகம் விழா மற்றும் நவகலஷாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, அதிகாலை மங்களவாத்தியம் முழங்க தீபவழிபாடு, விநாயகர் பூஜையும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, 10.30 மணிக்கு மகாபிஷேகம், ஹோமம் நடந்தது. பின்னர், 11.30 மணிக்கு மகாபூர்ணாஹுதி, யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுத்துக்கொண்டு கலசபுறப்பாடும், பின்னர் நவ கலஷாபிஷேகமும் நடந்தது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் பாலவாக்கம், லச்சிவாக்கம், பனப்பாக்கம், சூளைமேனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். அப்போது, 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.

The post லச்சிவாக்கம் கிராமத்தில் செங்காளம்மன் கோயில் நவகலஷாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: