கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு விலக்களிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என்று பேசி வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் விசாரணைக்கு வந்த போது, சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சீமான் தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, பிடி வாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று கூறி, சீமானின் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு விலக்களிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: