விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி

புதுச்சேரி: மரக்காணம் அருகே கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் இறந்தார்.புதுச்சேரி வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஹரி(33). இவர் புதுச்சேரி தினகரன் பதிப்பில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று அலுவலக வேலையாக சென்னைக்கு சென்றார். பின்னர் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு நேற்று மாலை தனது நண்பர் காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தார்.

காரை அவரே ஓட்டி வந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் செட்டிநகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே புதுச்சேரியிலிருந்து மரக்காணம் நோக்கி அதிவேகமாக வந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹரியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கனகசெட்டிக்குளம் பிம்ஸ் (தனியார்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலே ஹரி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.

இந்த விபத்தில் வேனில் இருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டதால் அவர்களும் பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வேன் டிரைவர் முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தினகரன் பொது மேலாளர் ஹரிக்கு மோனிகா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

The post விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி appeared first on Dinakaran.

Related Stories: