35 தொகுதிகள் கேட்டு நெருக்கடி: அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீட்டில் 3 மாதங்களாக நீடிக்கும் இழுபறி

சென்னை: பாஜக கூடுதல் தொகுதிகளை கேட்பதால் அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. கூட்டணியில் குழப்பம் இல்லை என எடப்பாடி தொடர்ந்து கூறி வந்தாலும் அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, தற்போது 35 இடங்களை ஒதுக்க அதிமுகவிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், பாஜகவுக்கு 35 தொகுதிகள் அதிகம் எனக் கூறி அதிமுக ஒதுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக வசம் இருக்கக்கூடிய தொகுதிகள் உட்பட பல தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளை தாண்டி, பிற மாவட்டங்களிலும் பாஜக தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக விரும்பவில்லை. கோவை தெற்கு, கோவை வடக்கு, திருப்பூர் தெற்கு, மொடக்குறிச்சி, பொள்ளாச்சி போன்ற தொகுதிகளை தர பாஜக நிர்பந்திக்கிறது. அதிமுக வசமுள்ள மேட்டுப்பாளையம், வால்பாறை தொகுதிகளையும் பாஜக குறிவைக்கிறது.

டிசம்பர் மாதம் தொடங்கிய அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சு 3 மாதங்களாக இழுபறியில் உள்ளது. 170 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விரும்பும் நிலையில் பாஜக கூடுதல் இடங்களை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வால்பாறை, மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை, ஒசூர், தளி தொகுதிகளையும் பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அதிமுக வசமுள்ள கோவை வடக்கு தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தியாகராயர் நகர், வேளச்சேரி, மையிலாப்பூர், ஆவடி, விருகம்பாக்கம் தொகுதிகளையும் பாஜக குறிவைக்கிறது

நாகர்கோவில், திருப்பரங்குன்றம், கிள்ளியூர், நாங்குநேரி, விளவங்கோடு தொகுதிகளையும் தர பாஜக நிர்பந்திக்கிறது. பாஜகவுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் வழங்க அதிமுக தலைமை சம்மதிக்காததால் தொகுதி 10 பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அமமுக, பாமக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் யார் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்துவதில் என்பதிலும் அதிமுக-பாஜக இடையே முரண் ஏற்பட்டுள்ளது. பாமக 20 முதல் 23 தொகுதிகள் வரை கேட்கும் நிலையில் அமமுகவும் 10 தொகுதிகள் வரை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை ஒதுக்குவோம் என பாஜக கூறுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: