தென்பெண்ணையாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்கள் செல்ல தடை

செங்கம்: தென்பெண்ணையாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு எச்சரிக்கை பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதுமட்டும் இன்றி காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் டானா புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் அனைத்து அணைகள் மற்றும் ஏரிகள், ஆறுகள், நிரம்பி வழிந்து ஓடுகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக வெள்ளம் இருகரைகளும் தொட்டு ஓடுகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் என பல்வேறு மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் கால்நடைகளை பராமரிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தென்பெண்ணையாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோயில் உள்ளது.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த கோயில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் சென்னியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு எச்சிக்கை பேனர் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் குளிப்பதற்கும் சென்னியம்மன் கோயிலில் வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக வருவதால் பொதுமக்கள் குளிக்கவோ, இறங்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என்று எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர். தொடர்ந்து தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் அளவு மள மளவென உயர்ந்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தென்பெண்ணையாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற சென்னியம்மன் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் பக்தர்கள் செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: