தீபாவளிக்கு எந்தவகையிலும் பாதிக்காதவாறு சிறு,குறு வியாபாரிகளுக்கு முறையான கட்டணம் நிர்ணயம் மேயர் முத்துத்துரை தகவல்

காரைக்குடி, அக். 26: காரைக்குடி மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநகராட்சி மேயர் எஸ்.முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன், ஆணையர் சித்ராசுகுமார் மற்றும் காவல்துறை, தரைக்கடை வியாபாரிகள், டென்டர் எடுத்தவர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மேயர் முத்துத்துரை கூறுகையில், தீபாவளி பண்டிக்கைக்கு சிறு வியாபாரிகள் தான் அதிகஅளவில் தரைக்கடை போட்டு வியாபாராம் செய்வார்கள். அவர்களுக்கு பாதிப்பு என தகவல் வந்தவுடன் நேரடியாக சென்று விசாரணை செய்யப்பட்டு உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவின்படி எந்தவகையிலும் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்காதவகையில் அனைத்து தரப்பினருடன் கலந்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மிகச்சிறிய அளவில் கடை வைத்து நடத்துபவர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். தவிர சிறிய கடை, நடுத்தர கடை, பெரிய கடை மற்றும் மிகப்பெரிய கடை என பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பண்டிகை காலத்திற்கு மட்டும் சிறிய கடைகளுக்கு ரூ 100, நடுத்தர கடைகளுக்கு ரூ.200, பெரிய கடைகளுக்கு ரூ.400, மிகப்பெரிய கடைகளுக்கு ரூ.800 என கட்டணம் நிர்ணயம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும், என்றார். இதில் வடக்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், முகமதுசித்திக், பேராசிரியர் கலாகாசிநாதன், தெய்வானைஇளமாறன், ராணி ஜெய்துன்சேட், ஏஐடியூசி ராமச்சந்திரன், சிவாஜிகாந்தி, சித்திக், மாறன், முகமதுபசீர், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தீபாவளிக்கு எந்தவகையிலும் பாதிக்காதவாறு சிறு,குறு வியாபாரிகளுக்கு முறையான கட்டணம் நிர்ணயம் மேயர் முத்துத்துரை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: