டிரைவரின் உடல் உறுப்புகள் தானம்

திருவாடானை,அக்.24: திருவாடானை அருகே சின்ன கற்காத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் இக்னேசியஸ் ராஜ்(44). திருமணமாகி மனைவியும், ஒரு மகன்,மகள் உள்ளனர். இவர், தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக டெப்போவில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவகோட்டை பகுதியில் டூவீலரில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இக்னேசியஸ் ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் முன் வந்தனர். அதன்படி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு, அவரது உடல் திருவாடானை அருகே சின்ன கற்காத்தக்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், திருவாடானை வட்டாட்சியர் அமர்நாத் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி உள்ளிட்ட போலீசாரும் மூளைச்சாவு அடைந்த இக்னேசியஸ் ராஜின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பிறகு அவரது உடல் அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

The post டிரைவரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Related Stories: