வெள்ளநீர் தேங்கிக் கிடப்பதால், வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வருவது பொதுமக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் அருகே பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி பாண்டியராஜன் (45), கால்வாயில் அடைத்துள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நேற்று இறங்கியுள்ளார். அப்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதேபோல் மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கோவில்பாப்பாகுடி, சத்தியா நகர் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மதுரை ஆனையூர் உழவர் சந்தைக்குள் 25க்கும் மேற்பட்ட கடைகள் நீரில் மூழ்கின.
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கூடல்நகர், பாண்டியன் நகர், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மருத்துவ தேவைக்குரிய முதியவர்கள், சிறுவர்கள் படகு மூலம் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு கொண்டு வரப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழை காரணமாக கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் நண்பகலில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மலைக்கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மண் சரிவை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் நேற்று மதியம் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளத்தில் சிக்கி வியாபாரி பலி appeared first on Dinakaran.