பணம் பறிக்கவே கொலை மிரட்டல் வருகிறது; கரப்பான் பூச்சியை கூட சல்மான் கான் கொன்றதில்லை: தந்தை பரபரப்பு பேட்டி


மும்பை: பணம் பறிக்கவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வருகிறது; அவர் கரப்பான் பூச்சியைக் கூட கொன்றதில்லை என்று அவரது தந்தை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலைக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும், குஜராத் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் இடையிலான பகை பற்றிய விவாதம் மீண்டும் வேகத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில், இந்த கும்பலின் பெயரில் மும்பை காவல்துறைக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள், இ-மெயில்கள், போன் கால்கள் வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அவ்வாறு கேட்டப் பணத்தை தரவில்லை என்றால், பாபா சித்திக்குக்கு நேர்ந்ததை காட்டிலும் மோசமான நிலைமை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரும் நிலையில், சல்மான் கானின் தந்தை சலீம் கான் அளித்த பேட்டியில், ‘எனது மகன் சல்மான் கான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார். இதுவரை அவர் ஒரு விலங்குகளையும் வேட்டையாடியதில்லை. சல்மான் கானுக்கு வரும் மிரட்டல்கள் யாவும் அவரிடம் மிரட்டி பணம் பறிப்பதற்காக மட்டுமே வருகின்றன. மேலும் அவர் எந்தவொரு மிருகத்தையும் கொன்றதில்லை. கரப்பான் பூச்சியைக் கூட கொன்றதில்லை.

வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று கூறினார். பஞ்சாபில் வசிக்கும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படும் கறுப்பின மானை, நடிகர் சல்மான் கான் கொன்றதாக கூறப்படுகிறது. அதனால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இவ்விவகாரத்தால் தான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும், சல்மானுக்கும் இடையே பகை நீடித்து வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில், தனது மகன் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டார் என்று அவரது தந்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பணம் பறிக்கவே கொலை மிரட்டல் வருகிறது; கரப்பான் பூச்சியை கூட சல்மான் கான் கொன்றதில்லை: தந்தை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: