ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்


திருமலை: ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் அளித்த பேட்டி: ஆந்திராவில் பொய் வாக்குறுதிகளை கூறி கூட்டணி கட்சிகள் உதவியுடன் தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார். மோசடி வார்த்தைகளை நம்பி மக்கள் வாக்களித்தனர். கடந்த 5 மாதங்களாக பயனாளிகளுக்கு எந்த ஒரு திட்டத்திலும் நேரடியாக வங்கிக்கு பணம் செலுத்தவில்லை. ஆளுங்கட்சிக்கு கொள்கை இல்லை. கூட்டணி ஆட்சியில் கொள்ளையடித்து, பங்கு போட்டு சாப்பிடுவது தான் கொள்கை. மதுபான டெண்டர் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் தரக்குறைவான மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக பிரசாரம் செய்து தற்போது தரமான மதுபானம் என கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள்.

மதுவை சாக்காக வைத்து மாநிலத்தில் ஊழல் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு ஆட்சியில் புதிய பிராண்டுகள் கொண்டு வரப்பட்டு மாநிலத்தில் மது மாபியா ஆட்சி செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் தற்போது இருண்ட காலகட்டத்தில் உள்ளது. மணல் மாஃபியா தலைவிரித்தாடுகிறது. சந்திரபாபு வீட்டுக்கு பக்கத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மாநிலத்திற்கு பூஜ்ஜியம் வருவாயை பெறச்செய்துள்ளனர். மாநிலத்தில் கமிஷன் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்கவில்லை, எல்லாமே ஊழல்தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன் appeared first on Dinakaran.

Related Stories: