அதிகரிக்கும் வெப்பத்தால் பகலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

 

சென்னை: தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

பகல் நேரங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளவும். கட்டட வேலை செய்வோர், புலம்பெயர் தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம். நீர்ச்சத்து குறைபாட்டால் வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கட்டாய தேவைக்காக வெளியே செல்ல நேர்ந்தால், குடை எடுத்து செல்லவும்.

வெளியே செல்ல நேரிட்டால், தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும். குடை, தொப்பி மற்றும் சன்கிளாஸ் பயன்படுத்தவும். மது அருந்துதல், காபி, தேநீர் மற்றும் செயற்கை குளிர்பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். வெயில் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இளநீர், பழச்சாறு, நுங்கு அருந்தவும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: