குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் மூழ்கி பல லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதுபோன்ற மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதிகளவு மழை பெய்தால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து மீண்டும் பாதிப்படையும் என்பதால், பாலங்களில் கார்களை நேற்று குடியிருப்பு வாசிகள் பார்க்கிங் செய்து இடம் பிடிக்க தொடங்கினர்.
அந்தவகையில் வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலம், பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மீது ஏராளமான கார்கள் தற்போது பார்க்கிங் செய்து இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வேளச்சேரி பாலத்தில் சிறிய அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கார்களை அங்கிருந்து எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறித்தினர். ஆனால் காரின் உரிமையாளர்கள் வாகனத்தை எடுக்க மறுத்துவிட்டனர்.இதையடுத்து மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததாக தகவல் பரவியது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை பெருநகரம் மற்றும் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கப்படுவதாக பரவும் செய்தி, வதந்தி மட்டுமே. அப்படி எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதேநேரம் கனமழை எச்சரிக்கை காரணமாக போக்குவரத்து காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மழை காலங்களில் மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்காக அருகில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். போக்குவரத்து சம்பந்தமான உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கனமழை எச்சரிக்கை காரணமாக மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை : போக்குவரத்து காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.