பெங்களூரு மாநகரில் குப்பைகள் அகற்ற 30 ஆண்டுகளுக்கு டெண்டர்: மாநில அரசு அனுமதி

பெங்களூரு: குப்பைகள் அகற்றுவதற்காக 30 ஆண்டுகளுக்கு டெண்டர் வெளியிடுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது என பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் கூறினார். பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:- பெங்களூரு மாநகரில் தற்போது தினந்தோறும் 5 டன் குப்பை கழிவுகள் சேருகின்றன. இதை அகற்றுவதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.1.80 கோடி செலவிடுகிறோம். ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு மாநகராட்சியின் சார்பில் ரூ.480 கோடி செலவிடப்படுகிறது.

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு குப்பை கழிவுகள் அகற்றும் பணிக்கான டெண்டர் கோருவது தொடர்பாக அறிக்கை தயாரித்து அரசிடம் அனுப்பி வைத்தோம். மாநகராட்சி அளித்த கோரிக்கையை மாநில அரசு பரிசீலனை செய்த பிறகு தற்போது அதற்கு அனுமதி அளித்துள்ளது. எனவே, இதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் என்றார். 30 ஆண்டுக்கு குப்பைகள் அகற்றுவதற்காக டெண்டர் விடுவதற்கான அவசியம் ஏன் வந்தது? இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என ஒன்றிய அமைச்சர் குமாரசாமி குற்றம் சுமத்தினார்.

பாஜ ஆளுங்கட்சி முன்னாள் தலைவர் என்ஆர் ரமேஷ் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெண்டரிலுள்ள சில முக்கிய அம்சங்கள் : ஒரே கம்பெனிக்கு 30 ஆண்டுகள் குப்பைகள் அகற்றுவதற்கான அனுமதி அளிக்கப்படும். மாநகராட்சி வாகனங்கள், துப்புரவு பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

தற்போது தினந்தோறும் 5 ஆயிரம் டன் குப்பை கழிவுகள் சேருகின்றன. இதை அகற்றுவதற்காக தினந்தோறும் ரூ.1.80 கோடி செலவிடப்படுகிறது. இதை அடிப்படையாக கணக்கிட்டு ஒரு ஆண்டுக்கு ரூ.33 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டு டெண்டர் கோரப்படுகிறது. புதிய டெண்டரின்படி பெங்களூரு மாநகராட்சி சார்பில் 30 ஆண்டுகளில் மொத்தம் ரூ.12 ஆயிரம் கோடி குப்பைகள் அகற்றுவதற்கு செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஜெயநகரிலுள்ள மின்சாரம் தயாரிக்கும் மையத்துக்கு வந்து பாருங்கள்
இது தொடர்பாக என்ஆர் ரமேஷ் கூறுகையில், “பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் அருகே குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் உள்ளது. இந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், உரங்கள் ஆகியவற்றினால் மாநகராட்சிக்கு உபரியாக வருமானம் கிடைக்கிறது. ஏற்கனவே குப்பை டெண்டர் எடுத்த நிறுவனங்கள் முறையாக செயல்படவில்லை.

அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் மாநகராட்சி நிர்வாகம், 30 ஆண்டுக்கு குப்பை அகற்றுவதற்கு டெண்டர் கோருவது எப்படி? முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் மாநகராட்சி தலைமை ஆணையர் முதலில் ஜெயநகரிலுள்ள மின்சாரம் தயாரிக்கும் இடத்தை பார்வையிட வேண்டும், அதன் பிறகு 30 ஆண்டுக்கு டெண்டர் புள்ளி குறித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்.

The post பெங்களூரு மாநகரில் குப்பைகள் அகற்ற 30 ஆண்டுகளுக்கு டெண்டர்: மாநில அரசு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: