கிருஷ்ணா தண்ணீர் ஜீரோ பாயின்டில் இருந்து 125 கன அடி தண்ணீர் இன்று பூண்டி வந்தடையும்

ஊத்துக்கோட்டை, பிப்.27: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பாயின்டில் இருந்து 125 கன அடி தண்ணீர் இன்று பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், கண்டலலேறு அணையில் இருந்து கடந்த வருடம் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி வரை 2.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி இரவு 9 மணிக்கு திடீரென கண்டலேறுவில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 3.8 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜனவரி மாதம் வழங்க வேண்டிய கிருஷ்ணா தண்ணீரை பிப்ரவரி மாதமான 23ம் தேதி வினாடிக்கு 200 கன அடி வீதமும், மறுநாள் காலை 500 கன அடியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டிற்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வந்தது. நேற்று காலை 6 மணிக்கு ஜீரோ பாயின்டில் இருந்து 126 கன அடியாக தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் இன்று பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்து அடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: