மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 151 ரன் குவிப்பு

ஷார்ஜா: ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில், இந்திய அணியுடனான ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் காயம் அடைந்த ஆஷா சோபனாவுக்கு பதிலாக ராதா யாதவ் சேர்க்கப்பட்டார்.

கிரேஸ் ஹாரிஸ், பெத் மூனி இணைந்து ஆஸ்திரேலிய இன்னிங்சை தொடங்கினர். பெத் மூனி 2 ரன் எடுத்து ரேணுகா சிங் பந்துவீச்சில் ராதா யாதவ் சசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஜார்ஜியா வார்ஹம் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, இந்திய வீராங்கனைகள் உற்சாகம் அடைந்தனர். எனினும், கிரேஸ் ஹாரிஸ் – கேப்டன் தஹ்லியா மெக்ராத் ஜோடி உறுதியுடன் விளையாடி ஆஸி. ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர்.

தஹ்லியா 32 ரன் (26 பந்து, 4 பவுண்டரி), கிரேஸ் ஹாரிஸ் 40 ரன் (41 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஷ்லி கார்ட்னர் 6, எல்லிஸ் பெர்ரி 32 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), அனபெல் சதர்லேண்ட் 10 ரன் எடுக்க, சோபி மோலினக்ஸ் டக் அவுட்டானார். ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது.

போபி லிட்ச்பீல்டு 15 ரன், மேகான் ஷுட் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட், ஷ்ரேயங்கா, பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா இணைந்து துரத்தலை தொடங்கினர்.

The post மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 151 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: