அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மோசடி: கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது

ஆவடி: அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட மத்திய குற்றப்பிரிவில் கோயம்புத்தூர் விளாங்குறிச்சி சேரன் மாநகரப் பகுதியை சேர்ந்த தனிஷ்சேவியர்ஆனந்தன் (54) என்பவர் 26.09.2024ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பது:- ஆவடி, காவல்சேரி கிராமத்தில் சொந்தமாக அட்டை கம்பெனி ஒன்றை எனது மனைவி பெயரில் வைப்பதற்கு நான் தயார் செய்து வைத்திருந்தேன்.

அப்போது சென்னை நொளம்பூரைச் சேர்ந்த எனது நண்பரான முத்துராஜ் (46) என்பவர் வேலையில்லாமல் கஷ்டபடுவதாகக் கூறியதால் எனது கம்பெனியை பார்த்துக்கொள்ளுமாறு 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரிடம் கூறினேன். முத்துராஜ் கம்பெனியை பார்த்துகொண்டு, மின்சார கட்டணம் மற்றும் சம்பளம் போக லாபத்தில் பாதி தருவதாக வாக்குறுதி அளித்தார். எனது கம்பெனியை நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அக்ரிமெண்ட் பத்திரம் போடாமல் சம்மதம் தெரிவித்தேன். அதன்படி முத்துராஜ் 2022 முதல் மாதந்தோறும் ரூ.25,000 கொடுத்து வந்துள்ளார். நான் வாங்கி வைத்திருந்த இயந்திரங்களை பயன்படுத்தி முத்துராஜ் அவரது மனைவி முத்துலட்சுமி பெயரில் அதே இடத்தில் புதிதாக கம்பெனியை ஆரம்பித்து நடத்தினார்.

முத்துராஜ், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் முத்துலட்சுமியின் நண்பரான கார்த்திக் ஆகியோர் சேர்ந்து அந்த கம்பெனிக்கு போலியாக வாடகை ஒப்பந்தப் பத்திரம், வாடகை ரசீது, தடையில்லா சான்று மற்றும் இயந்திரம் வாங்கியதாக போலியான பில் போன்ற ஆவணங்களை உருவாக்கி, எனது கையெழுத்தையும் போலியாக போட்டு ஆவணம் தயார் செய்துள்ளார்கள். மேலும் நவம்பர் 2021ல் பூந்தமல்லி சரகத்தில் முத்துலட்சுமி பெயரில் ஜிஎஸ்டி பில் பெற்று, கோயம்பேடு ஸ்டேட் பேங்க் வங்கி கிளையில் மார்ச் 2022ல் லோன் வாங்கியுள்ளனர். எனக்கு சொந்தமான இயந்திரங்களை வைத்து திருவள்ளூரில் மாவட்ட அலுவலகத்தில் அரசு மானியம் பெற்றுள்ளனர்.

நான் 2023ம் ஆண்டு வரவு செலவு கணக்கை பார்க்கச் சென்ற சமயம் எனக்கு தரவேண்டிய கம்பெனி வருமானத்தை தராமல் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. அவர்கள் என்னிடம் மொத்தம் ரூ.4 கோடி மோசடி செய்துள்ளனர். எனக்கு எழுதி கொடுத்ததுபோல் போலியான ஆவணம் தயாரித்து ஜி.எஸ்.டி மற்றும் கம்பெனி ஆவணங்களை உருவாக்கி மேற்படி வங்கியில் கடன் பெற்றும், கம்பெனி இயந்திரங்களை வைத்து திருவள்ளூரில் வங்கியில் கடனும், அரசு மானியமும் பெற்று ஏமாற்றிய மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதனையடுத்து, ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் மற்றும் காவல் துணை ஆணையாளர் பி.பெருமாள் ஆகியோரின் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பொன்.சங்கர், ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த சென்னை நொளம்பூர் ஐஸ்வர்யம் அப்பார்ட்மெண்ட்டைச் சேர்ந்த முத்துராஜ் (46), அவரது மனைவி முத்துலட்சுமி (40) மற்றும் மதுரவாயல் ரெசிடென்சி அப்பார்ட்மெண்ட்டைச் சேர்ந்த கார்த்திக் (39) ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மோசடி: கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: