திண்டுக்கல்லில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குழு கூட்டம்

திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மேலாண்மை குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தரமான மீன்கள் மற்றும் மீன் உணவுகளை நியாயமான விலையில், சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும், தரமான மீன் புரதச்சத்து உணவினை மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சேர்த்திட ஏதுவாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள், திண்டுக்கல் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை வாயிலாக மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. தற்போது 4 நடமாடும் மீன் விற்பனை வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை வழங்க ஏதுவாக வங்கிகள் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களிலுள்ள பண்ணை குட்டைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து மீன்வள பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரும் பருவமழைக்குள் மீன்வளர்ப்பிற்கு தகுதியான நீர்நிலைகளை பயன்படுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை நீர்நிலைகளிலும் மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 2024- 2025ம் ஆண்டிலிருந்து உரிய காலத்தில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு விட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் இந்து சாரா, ஞானசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: