இலங்கை கடற்படை சிறைபிடித்த 37 மீனவர்களை விடுவிக்க கோரி பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்: பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

சீர்காழி: பூம்புகார் மீனவர்கள் 37 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதானவர்களை உடனே விடுவிக்க கோரியும் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பூம்புகார் மீனவர் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை (60) என்பவரது விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் என்பவரது இரண்டு பைபர் படகுகளில் 37 மீனவர்களுடன் கடந்த 20ம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 21ம் தேதி காலை நெடும்தீவு அருகே இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக மீனவர்களை சிறைபிடித்தனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்தும் பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்தால் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

* மீனவர்களை விடுவிக்காவிட்டால் இலங்கை தூதரகம் முன் தர்ணா: பிரதமருக்கு மயிலாடுதுறை எம்பி கடிதம்
மயிலாடுதுறை எம்பி சுதா, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 43 பேர் மூன்று படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு படகு கவிழ்ந்து இரண்டு பேர் இறந்து தண்ணீரில் மிதந்துள்ளனர். உடனடியாக பூம்புகார் மீனவர்கள் இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 37 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மற்ற 6 மீனவர்கள் தப்பித்து பூம்புகார் வந்துள்ளனர். எந்த குற்றமும் செய்யாத பூம்புகார் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் ஒன்றிய அரசு இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டு கொள்ளவில்லை. 48 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற பூம்புகார் மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்காவிட்டால், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு பூம்புகார் மீனவர்களுடன் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை கடற்படை சிறைபிடித்த 37 மீனவர்களை விடுவிக்க கோரி பூம்புகார் மீனவர்கள் 2000 பேர் காலவரையற்ற வேலை நிறுத்தம்: பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: