காஞ்சி அத்திவரதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரம்: புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி, முதல் நாளான நேற்று உலக புகழ்பெற்ற‌ அத்திவரதர் கோயில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளதையொட்டி, பெருமாள் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் கோயில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதையொட்டி முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து புரட்டாசி விரதத்தை தொடங்க வருகை தந்தனர்.

புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி, அத்திகிரி மலையில் இருந்து கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய தேவி, பூதேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி புரட்டாசி விரதத்தை தொடங்கி சென்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி, அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயலாளர் சீனிவாசன் மற்றும் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post காஞ்சி அத்திவரதர் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: