விண்வெளி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விருப்பம்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அங்கிருந்தவாரே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அந்தவகையில் இந்திய வம்சாவழி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புச் வில்வோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஸ்டார் லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் இருவரும் 3 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த வாரே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்வோர் இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்தில் இருப்பதையே மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்தார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறிய இருவரும் சர்வதேச விண்வெளிமையத்தில் இருந்த வாரே வாக்களிக்க போவதாக தெரிவித்தனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்வோரை அழைத்து சென்ற ஸ்டார் லைனர் விண்கலம் சில நாட்களுக்கு ஆள் இல்லாமல் பூமிக்கு திரும்பியது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வீழ்வோர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கி இருப்பார்கள் என்று நாசா ஏற்கனவே அறிவித்துள்ளது. எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் இருவரும் பூமிக்கு அழைத்து வர இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

 

The post விண்வெளி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுனிதா வில்லியம்ஸ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: