படிப்படியாக கடைகள் குறைக்கப்படும் டாஸ்மாக்கை நடத்த முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை. கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். ஈரோட்டில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். மதுக்கடைகள் தொடர்ந்து நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. ஒரே நாளில் ஒரு உத்தரவு போட்டு நானும், முதல்வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடி விடலாம்.

மதுக்கடைகள் என்றைக்காவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதல்வருடைய எண்ணம். ஆனால் உடனடியாக இதை செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக, முதல்வரின் நோக்கமாக இருக்கிறது. எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை அதில் இருந்து வெளியேகொண்டுவரும்போது மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் மது ஒழிப்பு மாநாடு என்பது அவர்களது கட்சியின் கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவின்படி நடக்கும் மாநாடு. அது தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் நடத்துவது அரசுக்கு எதிரான மாநாடு அல்ல. விசிக மாநாட்டிற்கு அதிமுகவை அழைப்பதால் கூட்டணியில் மாற்றம் வரும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இதனால், திமுக கூட்டணியில் எவ்வித மாற்றமும் ஏற்பட போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post படிப்படியாக கடைகள் குறைக்கப்படும் டாஸ்மாக்கை நடத்த முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை: அமைச்சர் முத்துசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: