விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவு!!

சென்னை :விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போது அனைத்து பயிர்களுக்கும் தேவையான உர தேவை இருப்பு மற்றும் விற்பனை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கூட்டத்தின் போது யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் இதர உரங்களின் தேவை மற்றும் சம்பா பருவத்திற்கு தேவையான கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு தற்போதைய உர இருப்பு தேவையைவிட அதிகமாக அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.போதுமான உர இருப்பு இருந்த போதிலும், வேளாண் இணை இடுபொருட்களை, விற்பனையாளர்கள் கூடுதலாக விவசாயிகளிடம் வாங்குவதற்கு கட்டாயப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடமிருந்து கோரிக்கை பெறப்பட்டது. விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யும் போது இணை இடுபொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறு விவசாயிகள் விரும்பாத இடுபொருள்களை வாங்க வலியுறுத்தும் உர விற்பனையாளர்கள், இடுபொருள் விற்பனையாளர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டது. இதனை மீறும் உர விற்பனையாளர்கள் மற்றும் வேளாண் இடுபொருள் விற்பனை மையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-இன்படி, கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தேவைப்படும் நிகழ்வில் உரிமத்தை இரத்து செய்யவும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரப்பயன்பாடு குறித்தும் மண்ணின் வளத்தை பாதுகாத்திடவும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட அலுவலர்கள் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், தரமான உரங்கள் வினியோகம் செய்வதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், செல்வி அபூர்வா, வேளாண்மைத் துறை இயக்குநர்,பி.முருகேஷ், உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post விவசாயிகளுக்கு உர விற்கும்போது இணை இடு பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: