விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி வேலூர் சதுப்பேரில் பரிதாபம் கட்டை, இரும்பு எடுக்க முயன்றபோது

 

வேலூர், செப்.11: வேலூர் சதுப்பேரியில் விநாயகர் சிலைகள் கரைத்த குட்டையில் கட்டைகள், இரும்புகளை எடுக்க முயன்றபோது கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் சதுப்பேரி ஏரியில் அமைக்கப்பட்ட குட்டையில் நேற்று முன்தினம் வேலூர் மாநகருக்கு உட்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இந்நிலையில் சிலைகளை கரைத்த குட்டையில் இருந்து இரும்பு கம்பிகள் மற்றும் மிதிந்து கொண்டிருந்த கட்டைகளை எடுப்பதற்காக பலர் குட்டையில் இறங்கினர்.

இதில் கீழ்மொணவூர், ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு(40) என்ற கூலித்தொழிலாளியும் கட்டைகள், இரும்புகளை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் பிரபுவின் உடலை, அவரது உறவினர்கள் மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர். பின்னர், பிரபுவின் வீட்டிற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பிரபுவுக்கு, திருமணமாகி, 4 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விநாயகர் சிலைகளை கரைத்த குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி வேலூர் சதுப்பேரில் பரிதாபம் கட்டை, இரும்பு எடுக்க முயன்றபோது appeared first on Dinakaran.

Related Stories: