இடதுசாரி தலைவர் சுட்டுக் கொலை: பீகாரில் பயங்கரம்


அர்வால்: பீகாரில் இடதுசாரி தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். பீகார் மாநிலம் அர்வால் மாவட்டம் கிஞ்சார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்கன் பிகா கிராமத்தை சேர்ந்த சுனில் சந்திரவன்ஷி என்பவர் இடதுசாரி கட்சியான சிபிஐ (எம்எல்) கட்சியின் உள்ளூர் தலைவராவார். இந்நிலையில் சுனில் சந்திரவன்ஷி நேற்று மாலை உள்ளூர் சந்தைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனில் சந்திரவன்ஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அர்வால் எஸ்பி ராஜேந்திர குமார் பில் கூறுகையில், ‘முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.

The post இடதுசாரி தலைவர் சுட்டுக் கொலை: பீகாரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: