தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

தேனி: சின்னமனூர் அருகே, தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, காதலனுடன் சேர்ந்து மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த குச்சனூர்-சங்கராபுரம் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தது, போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உப்புக்கோட்டை அடுத்த மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சென்றாயன் (39) என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக சென்றாயன் மனைவி பூங்கொடி (33) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இது குறித்து போலீசார் கூறியதாவது: சென்றாயன் பந்தல் போடும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், தினசரி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் குடித்துவிட்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் புகுந்து பாத்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் சென்றாயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த செப்.4ம் தேதி சிறையிலிருந்து வீட்டுக்கு வந்த சென்றாயன், வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு, குச்சனூர்-சங்கராபுரம் இணைப்புச் சாலையில், தனியார் தென்னந்தோப்பில் வசித்து வரும் தனது மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவியுடன், மாணிக்காபுரத்தை சேர்ந்த உறவினர் ராஜபிரபு (23) இருந்துள்ளார். ஏற்கனவே மனைவி மீது சந்தேகத்தில் இருந்த சென்றாயன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானம் செய்த மனைவி ஊருக்கு செல்லலாம் என கூறி கணவன், மனைவி மற்றும் ராஜபிரபு ஆகியோர் ஒரே டூவீலரில் சென்றுள்ளனர்.

செல்லும் வழியில் குச்சனூர் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதிக்கு சென்றாயனை அழைத்துச் சென்று, அங்கு ராஜபிரபு மற்றும் பூங்கொடி சேர்ந்து 23 இடங்களில் கத்தியால் குத்தியும், கழுத்தறுத்தும் கொன்றுள்ளனர். பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர். திருப்பூரில் வேலை பார்க்கும் ராஜபிரபு 10 நாட்களுக்கு ஒருமுறை மாணிக்காபுரத்துக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் பூங்கொடிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவன் சிறைக்கு சென்றபின் திருப்பூருக்குச் சென்று ராஜபிரபுடன் பூங்கொடி இருந்துள்ளார். தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சென்றாயனை கொல்ல முடிவு செய்து, இருவரும் சம்பவம் நடந்த முதல் நாள் திருப்பூரில் இருந்து திரும்பி வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. ராஜபிரபுவையும், பூங்கொடியையும் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்த போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். தகாத உறவு விவகாரத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: