வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி உயிரிழப்பு

 

தாம்பரம், செப்.2: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா தெற்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்த பூங்காவில் பல வகையான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இருவாழ் உயிரிகள், மீன்கள் உள்ளிட்டவை அடங்கும். குறிப்பாக நீர்யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனித குரங்கு, புள்ளிமான், கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்றவை உள்ளன. இங்கு 5 பெண், 2 ஆண் என மொத்தம் 7 நீர்யானைகள் உள்ளன.

இதில் பிரகுர்த்தி என்ற பெண் நீர்யானை கடந்த 21ம் தேதி ஒரு குட்டியை ஈன்றது. தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டன. நீர்யானையின் குட்டியை பூங்கா நிர்வாகம் கடந்த 25ம் தேதி வெளியிட்டது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவிற்கு வந்து நீர்யானை குட்டியை பார்வையிட்டுச் சென்றார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இந்த நீர்யானை குட்டி திடீரென இறந்தது. இது பூங்கா நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நீர்யானை குட்டியின் உடல் பூங்கா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. நீர்யானை குட்டி இறப்புக்கு காரணம் தெரியவில்லை.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: