நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 9 மணிக்கு மேல் தேர்வு அறையில் தேர்வர்களுக்கு அனுமதியில்லை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

காஞ்சிபுரம், செப்.12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் நடக்கவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்களுக்கு தேர்வெழுத அனுமதியில்லை எனவும், தேர்வர்களுக்காக தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நாளை மறுநாள் (14ம்தேதி) நடக்கிறது. இந்த, தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறது. காலை 9 மணிக்குமேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், 12.45 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டுவர வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள் காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதோபோல், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு கூட வளாகத்திற்கு சென்று விடவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post நாளை மறுநாள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு 9 மணிக்கு மேல் தேர்வு அறையில் தேர்வர்களுக்கு அனுமதியில்லை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: