ஸ்பெயினில் களைகட்டிய தக்காளி திருவிழா: உலகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த மக்கள்!!

மாட்ரிட்: ஸ்பெயினில் கோலாகலமாக நடந்த தக்காளி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். 1945ம் ஆண்டு முதல் ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்டு இறுதி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே, வாலன்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் புனோல் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா நேற்று நடந்தது.

லா டொமேடினா எனப்படும் இந்த தக்காளி திருவிழாவில் வெள்ளை நிற உடையில் ஆண்கள், பெண்கள் என 22 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர். இந்த திருவிழாவுக்காக நன்றாக விளைந்த, சிவப்பு நிறத்திலான 150 டன் கணக்கிலான தக்காளிகள் 7 லாரிகளிலில் கொண்டு வரப்பட்டு தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கூழாக்கப்பட்ட தக்காளி ஜூஸில் இளம்பெண்கள், இளைஞர்கள் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்ளுக்காக நூதன விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்த பாரம்பரிய திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கென்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் திருவிழாவில் பங்கேற்க திரண்டு வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களுக்கு தலா ஒருவருக்கு ரூ.1,400 (16.70 டாலர்) என்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. பட்டாசு வெடிப்புகளுடன் திருவிழா களைகட்ட தொடங்கியது. இந்த திருவிழாவில், தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். இதன்பின்பு, தெருக்களில் உள்ள தக்காளி கழிவுகளை, அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவினர் நீரை பாய்ச்சியடித்து, சுத்தம் செய்தனர்.

The post ஸ்பெயினில் களைகட்டிய தக்காளி திருவிழா: உலகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த மக்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: