பாதசாரிகள் பாதுகாப்பாக கடந்து செல்ல சாலை, சந்திப்புகளில் பெலிகன் கிராசிங்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள சாலைகள், சந்திப்புகளை பாதசாரிகள் பாதுகாப்பாக கடந்து செல்ல பெலிகன் கிராசிங் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரித்துள்ளனர். இதன் முலம் பாதசாரிகள் ஒரு பட்டனை அழுத்தி சாலைகளை கடக்க முடியும். சென்னையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் சாலைகளை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

வாகனங்களின் வேகம், ஒருவழிப் போக்குவரத்து, வாகனப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பரபரப்பான சாலைகளை கடக்க முடியவில்லை என மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாதசாரிகள் சாலைகளை பாதுகாப்பாக கடந்து செல்ல சென்னையில் உள்ள சாலைகள், சந்திப்புகளில் பெலிகன் கிராசிங் அமைக்கப்படுகிறது. இதில் பாதசாரிகள் சிக்னல் கம்பங்கள் அல்லது சாலை கடப்பதற்கான இடத்தில் ஒரு பட்டனை அழுத்தும்போது வாகனங்கள் நிற்கவும், பாதசாரிகள் நடப்பதற்கான சிக்னல்கள் செயல்படும்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் சாலையை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கடக்கும் வகையில் இந்த பெலிகான் கிராசிங் அமைக்கப்படுகிறது. ராஜா அண்ணாமலை சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. டாக்டர் நாயர் சாலை – பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரிதர்டன் சாலை – பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா ஆர்ச் சந்திப்புகள் ஆகியவற்றை பாதசாரிகளுக்கு ஏற்ற சிக்னல்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை நடைமுறைக்கு வந்தவுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு பாதசாரியும் பட்டனை அழுத்துவதன் மூலம் போக்குவரத்தை சாலை சந்திப்பை கடக்க முடியும். இருப்பினும், சாலையில் இருக்கும் வாகனங்கள், போக்குவரத்தின் நிலை உட்பட பல்வேறு அம்சங்களை கணக்கிட்ட பின்னரே இந்த அமைப்பு பாதசாரிகளுக்கு பச்சை சிக்னலைக் காண்பிக்கும். பாதசாரிகள் சாலைகளை பாதுகாப்பாக கடக்க 15 முதல் 30 வினாடிகள் வரை நேரம் கிடைக்கும்.

பாதசாரிகள் சாலைகளை கடக்க அனுமதிக்கும் சிக்னல்களை இயக்குவதற்கு முன், நிகழ்நேர டிராபிக் தரவை கணினி பயன்படுத்தும். சாலைகள் மற்றும் சந்திப்புகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி மற்றும் பொது முகமைகள் மூலம் புதிய அமைப்பு விளம்பரப்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகர பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பல பரபரப்பான சாலைகள் மற்றும் சந்திப்புகளில் இந்த புதிய அமைப்பு இடம்பெறும். இருப்பினும், பெலிகன் சிக்னல்கள் நகர சாலைகளில் விஐபி நடமாட்டத்தின் போது அணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
பெலிகன் கிராசிங் என்பது பாதசாரிகள் மற்றும் வாகன போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் போக்குவரத்து சமிக்ஞை கொண்டது. இது பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பட்டன்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க முடியும். பெலிகன் கிராசிங் பொதுவாக சாலையின் இருபுறமும் இரண்டு துருவங்களில் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொன்றிலும் 3 சிக்னல்கள் மற்றும் பட்டன் அமைந்திருக்கும். பார்வை குறைபாடுள்ள பாதசாரிகளுக்கு உதவ, கேட்கக்கூடிய வகையிலும், தொட்டுணரக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இதன்மூலம் அவர்கள் எளிதாக சாலையை கடக்க முடியும். வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள இந்த பெலிகன் கிராசிங் தமிழ்நாட்டில் மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது. தற்போது, சென்னையிலும் அமைக்கப்படுகிறது.

The post பாதசாரிகள் பாதுகாப்பாக கடந்து செல்ல சாலை, சந்திப்புகளில் பெலிகன் கிராசிங்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: