லாரியில் கடத்தப்பட்ட ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல்: 5 பேர் சிக்கினர்

சேலம்: சேலம் வழியே லாரியில் நாகப்பட்டினத்திற்கு ரூ.27 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய வழக்கில் 5 பேர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து சேலம் வழியே நாகப்பட்டணம், திருவாரூர், புதுச்சேரிக்கு லாரிகளில் ரகசியமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார், தர்மபுரி மாவட்டம் அரூர்-சேலம் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அதில் நேற்று, ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர்.

அந்த லாரியில் வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அடியில் அட்டை பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனே லாரி டிரைவரான சேசுகும்மாலா (34) என்பவரை மடக்கி பிடித்தனர். பின்னர், லாரிக்குள் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். டிரைவர் சேசுகும்மாலாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் ரூ.27 லட்சம் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 4 பேரை இன்று பிடித்தனர். அந்த 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஏற்கனவே கைதான சேசுகும்மாலாவை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post லாரியில் கடத்தப்பட்ட ரூ.27 லட்சம் கஞ்சா பறிமுதல்: 5 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: