சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விவசாயிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை

*பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர் : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, எளம்பலூர் அனபுடையான் கோயில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான சரவணன் (42) கடந்த 2022 மார்ச் 11ம் தேதி பாலியல் தொந்தரவு செய்தார். இதுதொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சரவணன் கைது செய்தனர்.

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் மகிளா நீதி மன்ற அரசு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் நேற்று இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றவாளி சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹50 ஆயிரம் அபராதம் விதித்த தோடு, அபராதம் கட்ட தவறினால், மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சரவணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போக்சோ வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா, நீதிமன்ற முதல்நிலை காவலர் தேன்மொழி ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா வெகுவாக பாராட்டினார்.

The post சிறுமிக்கு பாலியல் தொந்தரவு விவசாயிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை appeared first on Dinakaran.

Related Stories: