₹46.31 லட்சம் முறைகேடு செய்த கூட்டுறவு செயலாளர் கைது அதிமுகவை சேர்ந்த நிர்வாகிக்கு வலை ஆற்காடு அருகே பால் உற்பத்தியாளர் சங்கத்தில்

வேலூர், ஆக. 22: ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ₹46.31 லட்சம் முறைகேடு செய்த சங்க செயலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதிமுகவை சேர்ந்த நிர்வாகியை தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா தாமரைபாக்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் அந்த கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பெருமளவு நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் கடந்த 1-4-2019 முதல் 31-3-2021 வரை சங்கத்தின் செயல்பாடுகள், துணை நிதி, சட்ட விதிகள், ஆணையரின் சுற்றறிக்கைபடி சங்கம் செயல்படுகிறதா என விசாரணை நடத்த கூட்டுறவு சங்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அக்காலக்கட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும், செயலாளர் செல்வரசு என்பவரும் சேர்ந்து சங்கத்தின் வங்கி கணக்கில் இருந்து ₹46 லட்சத்து 31 ஆயிரத்து 559ஐ முறைகேடு செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு (பால் வளம்) துணை பதிவாளர் விக்னேஷ்வரன், வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சங்கத்தின் நிதியில் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செயலாளர் செல்வரசுவை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பால் உற்பத்தியாளர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பால்வளத்துறை துணை பதிவாளர் விசாரணை நடத்தினார். அதில் சங்கத்தில், தனியாருக்கு பால் விற்பனை செய்த தொகையை வசூலித்து வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரிய வந்தது. மேலும் நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பயணப்படி, பால் உப பொருட்கள் விற்பனையாளருக்கு சைக்கிள் படி வழங்குவதில் குளறுபடி என மொத்தம் ₹46.31 லட்சம் முறைகேடு செய்தது தெரிய வந்தது. முதற்கட்டமாக கூட்டுறவு சங்க செயலாளர் செல்வரசுவை கைது செய்தோம். தலைமறைவாக உள்ள கிருஷ்ணனை தேடி வருகிறோம்’ என்றனர்.

The post ₹46.31 லட்சம் முறைகேடு செய்த கூட்டுறவு செயலாளர் கைது அதிமுகவை சேர்ந்த நிர்வாகிக்கு வலை ஆற்காடு அருகே பால் உற்பத்தியாளர் சங்கத்தில் appeared first on Dinakaran.

Related Stories: