நாம் தமிழர் நிர்வாகியால் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

* 15 நாட்களில் முழு விசாரணையையும் முடிக்க வேண்டும்
* முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, 15 நாட்களுக்குள் முழு விசாரணையையும் முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே என்சிசி முகாமின் போது, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலி பயிற்சியாளரான நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் (31) குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முகாம் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெய முரளிதரன், சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், என்சிசி திட்டத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் பள்ளி மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட என்சிசி பயிற்றுநர்கள் 6 பேரில் 5 பேரும்,இந்த சம்பவத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் 4 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த போலியான என்சிசி பயிற்றுநர்கள் இதேபோன்று மேலும் சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சம்பவங்களை பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்பட காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு ஒன்றை அமைத்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நாம் தமிழர் நிர்வாகியால் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: