ஈரோட்டில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா

 

ஈரோடு, ஆக. 21: ஈரோட்டில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல செயலாளர் ஜோதிமணி தலைமை தாங்கினார். இதில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும்.

பிரிவிற்கு 2 பேரை கள உதவியாளராக ஒப்பந்தாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசு உத்தரவுக்கு எதிராக நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தக்கூடாது. பல ஆண்டுகளாக மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம் பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மின் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: