அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 1.1.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு, வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் போன்ற பணிகள் வருகிற 20ம் தேதி முதல் (செவ்வாய்) முதல் 18.10.2024 வரை மேற்கொள்ளப்படும்.

தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024ல் வெளியிடப்படும். 29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு 24.12.2024 காணப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 06.1.2025 வெளியிடப்படும். 29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர் தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம். சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம். 1.1.2025, 1.4.2025, 1.7.2025 மற்றும் 1.10.2025 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யலாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: