சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தந்தங்கள் கடத்தியவர் கைது

சத்தியமங்கலம்,ஆக.15: சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தந்தங்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் வனப்பகுதியில் வனத்துறையினருடன் மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திங்களுர் அடுத்த பாசக்குட்டை என்ற இடத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பாசக் குட்டை வனப்பகுதியில் ஒரு ஜோடி யானை தந்தத்தை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்று வனத்துறையினர் அந்த இடத்தை தோண்டியபோது ஐந்தரை அடி நீளமுள்ள இரு யானை தந்தங்களை தோண்டி எடுத்தனர். ஒரு யானை தந்தத்தின் எடை 30 கிலோ வரை இருப்பதால்கடத்துவதற்கு ஏதுவாக தந்தத்தை கம்பியால் சுற்றி வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. விசாரணையில் யானை தந்தம் வைத்திருந்த திங்களூர் பாசக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த துரைசாமி (42) என்பதும், இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்களை திருடியதும் தெரிய வந்துள்ளது.

தமிழக கர்நாடக வனத்தையொட்டியுள்ள ஊகியம் வனப்பகுதியில் அண்மையில் இறந்த யானையின் தந்தங்கள் காணாமல் போனதாக கர்நாடக வனத்துறை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று பறிமுதல் செய்த யானை தந்தத்துக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தந்தங்கள் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: