கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு :கோவையில் பரபரப்பு

கோவை: கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர். வேறு உடை அணிந்து வருமாறு திருப்பி அனுப்பினர். ஆனால் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி, கருப்பு வண்ண ஓவர் கோர்ட் அணிந்தபடி பங்கேற்றார்.கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை நடந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு கருப்பு உடையில் வந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், காவல் துறையினருடன் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பத்திரிகையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். கருப்பு உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகளை அரங்கிற்குள் அனுமதிக்க மறுத்த போலீசார், அவர்களை வேறு உடை அணிந்து வரும்படி திருப்பி அனுப்பினர். கருப்பு உடை அணிந்த மாணவ, மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி கருப்பு நிற கோட் அணிந்தபடி நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுபற்றி தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்திருந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது’’ என்றார்.

The post கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு :கோவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: