சென்னை : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் மற்றும் தமிழர் திருவிழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இடம்பெற்றுள்ளவை பின்வருமாறு…
*மாவட்ட ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
*விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
*முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
*விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்.
*காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
*ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அதில் தொடர்புடைய துறைகள் அனைத்திலும் அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
*இந்த போட்டிகளில் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் அதுதொடர்பான விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவது முக்கியம்.
*போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
*விண்ணப்பிக்கும்போதே காப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்துவது அவசியம்.
*ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில் அத்தகைய போட்டிகள் நடத்தக் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
*தேவையற்ற குழப்பங்கள், தவறுகளைத் தவிர்க்கவும், ஒழுங்குமுறையுடன் போட்டிகளை நடத்தவும், விதிகளை சரிபார்க்கும் பட்டியலின்படி (செக் லிஸ்ட்) செயல்படுதல் வேண்டும்.
*போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருத்தல் அவசியம்.
*தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவர்கள் வழங்க வேண்டும்.
*அதேபோன்று, போட்டி களத்துக்குள் பார்வையாளர்களும், வெளி நபர்களும், வீரர்கள் அல்லாத பிறரும் இருக்க அனுமதியில்லை. அதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
