ஜிப்லைனில் ஆற்றை கடந்து சிகிச்சை அளித்த கூடலூர் நர்ஸ்: குவியும் பாராட்டு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த துப்பு குட்டி பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் தொண்டு அமைப்பின் குழு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு சிகிச்சை அளிக்க சென்றனர். இந்த குழுவில் இருந்த ஒரே பெண் செவிலியர் சபீனா (39). இவர்கள் சூரல் மலைப்பகுதிக்கு சென்றனர். ஆனால் அதிக பாதித்த முண்டக்கை கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் செவிலியர் வேண்டும் என ராணுவத்தினர் கேட்டனர். அப்போது, பெண் செவிலியரான சபீனா தைரியமாக ஆற்றை கடந்து சிகிச்சை அளிக்க முன்வந்தார். சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை பகுதிக்கு செல்லும் ஆற்றுப்பாலம் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஆற்றை கடந்து செல்வதற்கு ராணுவத்தினர் அந்தரத்தில் தொங்கியபடி செல்லும் ஜிப்லைன் அமைத்து அதன் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஜிப்லைன் மூலமாக ஆற்றைக்கடந்து செல்வதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகும். ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும், தண்ணீருக்கு மேல் ஜிப்லைனில் தொங்கியபடி செல்வது ஆபத்தான செயலாகும். இதில் புதிதாக தொங்கி செல்வதற்கு அதிக மன தைரியம் வேண்டும் என்பதால் அது குறித்து சபீனாவிடம் ராணுவத்தினர் கேட்டனர். ஆனால், சபீனா ஜிப்லைனில் தொங்கிய படி ஆற்றைக்கடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டார். பின்னர், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் ராணுவத்தினர் அமைத்த ஜிப்லைனில் தொங்கியபடி முண்டக்கை பகுதிக்கு சென்றார். அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் தங்கி இருந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர், மீண்டும் அங்கிருந்து ஜிப்லைன் மூலமாக ஆற்றை கடந்து வந்தார். தொடர்ந்து, சூரல்மலை பகுதியில் தங்கியிருந்து நிலச்சரிவில் காயமடைந்து மீண்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறார்.

இதுகுறித்து சபீனா கூறியதாவது: சம்பவம் நடந்த அதிகாலை நேரத்தில் தகவல் கிடைத்ததும் சுமார் 9 மணிக்கு பாதிக்கப்பட்ட இடத்திற்கு எங்கள் குழுவினர் சென்றடைந்தோம். அப்போது, அங்கிருந்த ராணுவத்தினர் பெண் செவிலியர் ஒருவர் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என கூறினர். எங்களது குழுவில் நான் மட்டுமே பெண் செவிலியராக இருந்தேன். கூடலூர் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடைசி நிலையில் இருக்கும் பலருக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளித்த அனுபவம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தைரியம் என்னிடம் ஏற்பட்டது. பின்னர், முண்டக்கை பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக ஜிப்லைன் மூலம் ஆற்றை கடந்து சூரல்மலை முகாமிற்கு கொண்டு வர சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும். இதனால், முண்டக்கை பகுதியில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு பெண் செவிலியர் வேண்டும் என கேட்டதும் உடனடியாக நான் முன்வந்து அப்பகுதிக்கு சென்றேன்.

ஜிப்லைனில் மருந்துகள் அடங்கிய பையை கையில் பிடித்தபடி சென்றதால் கீழே வெள்ளப்பெருக்கை பார்க்கும் போது தலை சுற்றல் ஏற்பட்டது. முண்டக்கை பகுதிக்கு சென்றதும் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். இதில், முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்ட காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தேன். சில நேரம் பாதிக்கப்பட்டவர்களுடன் இறந்தவர்களின் உடல்களையும் ஒரே வாகனத்தில் கொண்டு வருவார்கள். அந்த உடல்களை பார்ப்பதற்கு அச்சம் ஏற்பட்டாலும், அவர்களுக்கு எந்தெந்த பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை நேரில் பார்த்தேன். சுமார் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கையில் கொண்டு சென்ற மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஜிப்லைனில் ஆற்றை கடந்து சிகிச்சை அளித்த கூடலூர் நர்ஸ்: குவியும் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: