காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு

பெங்களூரு: கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த நீரின் அளவு 84ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில் இரு அணைகளில் இருந்தும் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.14 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வெளியேற்றதின் அளவு இன்று மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 54,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமாவதி அணையில் இருந்து 75,000 கனஅடி நீரும், ஆரங்கி அணையில் இருந்து 25,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருவதால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து சில மணி நேரங்களில் 1 லட்சம் கனஅடியாக அதிகரித்து அங்கிருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வயநாடு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் கபினி அணைக்கு தற்போது நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரித்து அங்கிருந்து நீர் வெளியேற்றம் 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலைக்குள் கபினி அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் ஒரு லட்சம் கனஅடியாகவும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலைக்குள் காவிரியில் நீர் வெளியேற்றத்தின் அளவு 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்று மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: